வந்தே மாதர ஆட்சியின் வக்கணை இதுதானா?
உ.பி.யில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டக் கூடாதாம்
உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் தடை!
மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கை எடுக்குமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம், பத்தேஃபூர் அருகி லுள்ள ஷம்சாய் கிராமத்தில் உள்ள ‘வால்மீகி’ ஜாதியினர் என்று அழைக்கப்படக்கூடிய தாழ்த்தப்பட்டோருக்கு முடி வெட்டக்கூடாது, முகச்சவரம் செய்யக் கூடாது என்று சொல்லும் உயர்ஜாதியினரைக் கண்டித்து மனித உரிமை ஆணையங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
250 குடும்பங்கள் -
1250 பேர் வாழும் கிராமம்!
உத்தரப்பிரதேச மாநிலம், பத்தேஃபூர் அருகிலுள்ள ஷம்சாய் கிராமத்தில், 15,000 தாக்கூர்களும், பார்ப்பனர் களுமான உயர்ஜாதியினர் வசிக்கின்றனர்; அங்கே வால்மீகி ஜாதியினர் என்ற ‘‘தோட்டிகள்’’ என்று அழைக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட துப்புரவு செய்யும் சமுதாய மக்கள் 250 குடும்பங்களாக - சுமார் 1,250 பேர் வாழுகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக அங்குள்ள முடிதிருத்தும் பணியாளர்களை இந்த ‘வால்மீகி’ ஜாதியினருக்கு முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ கூடாது என்று, கிராமத்தில் உள்ள உயர்ஜாதிப் பார்ப்பனர்களும், தாக்கூர்களும் அச்சுறுத்தியதால், அவர்கள் யாரும் இவர்களுக்கு முடி திருத்தவோ, முகச்சவரம் செய்யவோ முன்வருவதில்லை!
முடி திருத்தினால் ‘தீட்டு’ ஆகிவிடுமாம்!
காரணம், அந்த ‘பார்பர்கள் - முடி திருத்துவோர் தங்களுக்கு முடி திருத்தும் பணியில் உள்ளதால், கீழ்ஜாதியினரான அந்த ‘வால்மீகி’ ஜாதியான துப் புரவு தொழிலாளிகளுக்கு முடி திருத்தினால் ‘தீட்டு’ ஆகிவிடும் என்று கூறி, தடை விதித்து நடைமுறையிலும் கொண்டு வந்தனர்.
ஒரு மாதம் முன்பு, இஸ்லாமிய முடி திருத்தும் தோழர், இந்த வால்மீகி ஜாதியினருக்கு முடி திருத்த முன்வந்தார்; அப்படி அவர் செய்ததால், கிராமத்தில் உள்ள அத்தனை உயர்ஜாதிக்காரர்களும் அந்த முஸ்லிமை மிரட்டி அச்சுறுத்தியதால் முகச்சவரம் செய்துகொண்டவரைக் கூட முழுமையாக முடிக்காமல் விரட்டி அனுப்பி விட்டனர்! அவரும் பயந்து போய் இவர்களுக்கு முடி திருத்த மறுத்துவிட்டார்!
20 கிலோ மீட்டர் பயணம் செய்துதான்....
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பயணம் செய்து, சந்தாசி, பஜோயி, இஸ்லாம் நகர் ஆகிய நகரங்களுக்குச் சென்று முடி வெட்டிக் கொண்டு வருவார்கள் இந்த வால்மீகி ஜாதி மக்கள்!
யாராவது வால்மீகி ஜாதியினருக்கு முடிதிருத்த முன்வந்தால் அந்த முடி திருத்தும் கடைகளை நிர்பந்தப் படுத்தி மூடி விடுவார்களாம் அந்த ஷம்சாய் பகுதியில்!
மதம் மாறுவோம் என்று
எச்சரிக்கை விடுத்தனர்!
நேற்று (15.5.2017) வால்மீகி தர்மசமாஜ் அமைப்பின் தேசியத் தலைவர் லல்லா பாபு திராவிட் என்பவர், மற்ற ஒடுக்கப்பட்ட ஜாதி அமைப்புகளின் தலைவர்களுடன் சென்று, முன்னாள் கிராம அதிகாரி சஞ்சீவ் சர்மா, போலீஸ் அதிகாரி (இன்ஸ்பெக்டர்) சஞ்சீவ் சர்மா (எல்லாம்பார்ப்பனர்களே) ஆகியோரையும் கிராமப் பஞ்சாயத்தாரையும் சந்தித்து 24 மணிநேரக் கெடு வுடன் கூடிய எச்சரிக்கையைத் தந்துள்ளார். ‘‘இந் தத் தடையை கிராம உயர்ஜாதியினர் ‘வாபஸ்’ வாங்காவிட்டால்,அதாவதுவால்மீகியினருக்குமுடி திருத்த அனுமதிக்காமல் இருந்தால், நாங்கள் அனை வரும் இஸ்லாமியர்களாக மதம் மாறுவோம்'' என்று கூறியுள்ளார்!
வழமைபோல் உயர்ஜாதிக்காரர்கள், இப்பிரச்சினை எங்களால் அல்ல; மாறாக, இது முடி திருத்துவோருக்கும், வால்மீகி ஜாதியினருக்கும் உள்ள பிரச்சினை என்று ஒரு திசை திருப்பல் நாடகம் ஆடியுள்ளனர் என்று போலீஸ் அதிகாரியான சஞ்சீவ் சர்மாவே கூறுகிறார்!
மனித உரிமை ஆணையங்கள்
நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இந்த நாடு ‘‘சுதந்திரம் அடைந்து’’ 70 ஆண்டுகள் ஆன நிலையில்கூட, இந்த அநாகரிக மனித உரிமை மறுப்பா? மனித உரிமை ஆணையங்கள் இப் பிரச்சி னையைக் கையில் எடுக்கவேண்டும்.
ஆதித்தயநாத் முதல்வராக வந்துள்ள நிலையில், இந்த நிலை தொடர வேடிக்கை பார்ப்பதா?
‘வால்மீகி’ என்று பெயர் வைத்தால்
பிறவி இழிவு நீங்கி விடுமா?
துப்புரவு தொழிலாளர்களுக்கு ‘வால்மீகி’ ஜாதி என்று பெயர் வைத்தால் அவர்களின் பிறவி இழிவு நீங்கி விடுமா?
இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஹிந்துத்துவா போற்றும் இராமாயணத்தை எழுதிய ‘வால்மீகி’ பெயரில் உள்ள ஜாதியினருக்கே இந்த நிலை! இராமாயணம் - வால்மீகி எழுதியதாகத்தானே கூறப்படுகிறது? வால்மீகி வம்ச பரம்பரையை ஒதுக்கி வால்மீகியின் இராமன் கடவுள்; மனிதன் இன்னமும் ஒதுக்கப்பட்ட கீழ்மகனா? என்னே ஹிந்து ஜாதிமுறை?
தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது - அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் குற்றம் என்ற அரசமைப்புச்சட்ட 17 ஆவது விதியும், அதனையொட்டி சிவில் உரிமைச் சட்டங்களும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள்தானா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்
ஜாதீய வன்கொடுமை நிகழ்வுகள்!
ஹிந்து மதம்தான் சகோதரத்துவத்தை, சகிப்புத்தன் மையைப் போதிக்கும் மதம் என்று கூறுவோர் இதற்கென்ன பதில் கூறுகிறார்கள்?
பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் ‘தலித்’துகளின் கொடுமையான கோரப் படுகொலை சில மாதங் களுக்குமுன் நிகழவில்லையா? அதுபோல, அரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த ஜாதி வன்கொடுமை நிகழ்வுகள் அன்றாட அவலங்களாகத் தொடருகிறதே?
இதுதான் ‘வந்தே மாதர’ ஆட்சியின் வக்கணையா? மனித உரிமைகள், இப்படி உழைக்கும் பாட்டாளி சகோதரர்களுக்கு மறுப்பது குற்றச் செயல் அல்லவா?
மத்திய - மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா?
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
16.5.2017