அமெரிக்க - டெக்சாசில் முழக்கம்
டெக்சாசு, ஜூலை 14 சுயமரியாதை பயின்றோர் செல்லுமிடமெல்லாம் சிறப்பு! புலம்பெயர்ந்து சென்றாலும் தன் பாதை மாறாது நடப்பவர்கள் தந்தை பெரியாரின் பிள்ளைகள். வட அமெரிக்கா வாழ் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும் அமைப்பு வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவை. இந்த அமைப்பு ஆண்டுதோறும் பேரவை தமிழ் விழா என வட அமெரிக்காவில் வாழும் அனைவரும் பங்கேற்கும் நிகழ்வை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டிற்கான விழா டெக்சாசு மாகா ணத்தில் கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை நான்கு நாள் நிகழ்வாக நடைபெற்றது. இயல், இசை, நாடகம் என தமிழர் கலைகளை, வாழ்வியல் வளங்களை போற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழகத்திலிருந்தும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் உள்ளூர் படைப்பாளர் பலர் சிறப்பாக பங்கு பெற்றனர். தமிழர் வாழ்வியல்பற்றியும், உயர்வு குறித்தும் சிந்தித்தும், பேசியும் தன் வாழ்நாள் முழுதும் பணி செய்து
தமிழர் நெஞ்சங்களில் நீங்காது வாழும் தந்தை பெரியார்பற்றி போற்றாத தமிழர் இல்லை, தமிழர் விழா இல்லை. இந்த மாபெரும் விழாவும் அதனைப் பின்பற்றியது. தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக ஓர் இணையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. தேனைத் தேடி வரும் வண்டாக பகுத்தறிவு பயில தோழர்கள் பலர் திரண்டு வந்திருந்தனர். தந்தை பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று, கருத்தரங்கக் கலந்துரையாடலை துவக்கி வைத் தார். தோழர்கள் தங்களது கருத்துகளாக பதிவு செய்ததின் சாரம் வருமாறு:
ஜாதிய வேறுபாடுகளை களைந்து சமத்துவ சமுதாயம் ஏற்பட தொடர்ந்து பணியாற்றுதல் அவசியம்
மூட நம்பிக்கைகளை களைந்து அறிவியல் பாதையில் பயணப்படுதல்
சமூக வலைத்தளம், ஊடகம் என பல்வேறு தளங்களில் பகுத்தறிவினைப் பேணுதல் அறிவு தளத்தின் தேவை இன்று மிக இன்றி யமையாத ஒன்று.
எனவே தந்தைப் பெரியாரின் சீர்த்திருத்த கருத்துகளை உலகறிய நாம் கொண்டு செல்வதில் மிக முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என வந்திருந்த அனைவரும் விழி உயர்த்திப் பேசினர்.
இந்த எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் வண்ணம், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலக பகுத்தறிவாளர் மாநாடு போன்று, அடுத்த ஆண்டு செப்டம்பர் 21-22 ஆகிய தேதிகளில் சிகாகோவில் உலக மனித நேய ஆர்வலர்கள் மாநாடு'' நடைபெறும் என அறிவிக்கப்பட்டதுடன், அனைவருக்கும் அழைப் பும் விடுத்தார் மருத்துவர் சோம. இளங்கோவன்.
சிகாகோ மாநாட்டு நிகழ்வில் பேராசிரியர் உல்ரிக் நிக்கலசு, கவிஞர் அறிவுமதி, ஓவியர் மருது, பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன், பேரவை விழா ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் இன்றும் என்றும் நமக்குத் தேவை என மனதில் எண்ணியவாறு அடுத்த ஆண்டு நிகழ்வினை எதிர்நோக்கியும், அதுவரை ஆற்ற வேண்டிய பகுத்தறிவு பணிகளை எண்ணியவாறும் தோழர்கள் தங்களது இல்லம் நோக்கி திரும்பினர்.
செய்தித் தொகுப்பு: சரவணக்குமார்
தகவல்: சோம.இளங்கோவன்
அமெரிக்காவின் சம்பர்க்கில்...
திராவிடம் 2.0 கருத்தரங்கம் - சிகாகோ
நாள்: 15.7.2018 நேரம்: மதியம் 2 மணிமுதல் 5 மணிவரை
இடம்: இன்டர்நேஷனல் வில்லேஜ் அப்பார்ட் மெண்ட்ஸ், 1220 இ அல்கான்குயின் சாலை, சம்பர்க், அய்.எல்.
திராவிடம் இன்றைய பொருத்தப்பாடு'' என்கிற தலைப்பில் தோழர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) அவர்களும்,
பெரியாரின் இன்றைய தேவை'' என்கிற தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) அவர்களும்,
பெரியாரை உலக மயமாக்குவோம்'' என்கிற தலைப்பில் பேராசிரியர் உல்ரிக் நிக்கலசு (ஒருங்கிணைப்பாளர், பெரியார் பன்னாட்டு அமைப்பு, ஜெர்மனி கிளை) அவர்களும் உரையாற்ற உள்ளனர்.