நிர்வாண சாமியாரை சட்டமன்றத்தில் அமர வைத்து ஆசி பெறுவோர் - வெளிநாட்டுப் பெண்களின் உடையைப்பற்றி பேசலாமா?
சக அமைச்சர்களை ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழலாக்காமல்
நாட்டு வளர்ச்சியின் பக்கம் பிரதமர் திரும்பச் செய்யட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர்
அறிக்கை
வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பெண்கள் எத்தகைய உடை அணிந்து வரவேண்டும் என்று பி.ஜே.பி. அமைச்சர் தலையிட்டுப் பேசுவது சரியா? நிர்வாண சாமியாரை அரியானா சட்டப் பேரவையில் அமர்த்தி ஆசி பெற்றுக் கொள்ளும் பி.ஜே.பி., வெளிநாட்டுப் பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது குறித்தெல்லாம் பேசலாமா? சக அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸின் ஊதுகுழலாகச் செயல்படும் தன்மையை மாற்றி, நாட்டின் வளர்ச்சிப் பக்கம் அவர்களை பிரதமர் மோடி திருப்பட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி பதவியேற்றபோது, ஆர்.எஸ்.எஸ். ஆசாமிகளைக் கொண்டு அவரது அமைச்சரவை நிரப்பப்பட்டதன் விளைவை பிரதமர் மோடி அனுபவித்து வருகிறார்!
எந்த அமைச்சரையும் எச்சரித்து வெளியேற்றும் அதிகாரம் பரிதாபத்திற்குரிய பிரதமருக்கு இல்லை போலும்; காரணம், மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது.
ஒவ்வொரு அமைச்சரும் ஆர்.எஸ்.எஸ். தீவிரக் கொள்கையை அமல்படுத்துவோராகக் காட்டிக் கொள்வது - மத்திய அரசுக்கு நாளும் தலைவலியையும், திருகு வலியையும் ஏற்படுத்துகிறது!
வெளிநாட்டுப் பெண்கள் உடையிலும் சர்ச்சையா?
மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் பொறுப்பில் உள்ள மகேஷ் சர்மா என்பவர், ‘‘சுற்றுலாவுக்கு இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் - குறிப்பாக பெண்கள் குட்டைப் பாவாடை அணிந்து வரக்கூடாது’’ என்று அறிவித்ததைவிடக் கேலிக் கூத்து வேறு இருக்க முடியுமா?
வெளிநாட்டுப் பெண்களை மட்டுமல்ல, இந்தியப் பெண்களையும் இவர்கள் , நாளும் இழிவுபடுத்தியே - அவர்களை தங்களது அடிமைகள் என்று கருதியே உத்தரவு போடும் எஜமானர்களாகவே கருதி, திமிர்வாதப் பேச்சில் திளைக்கின்றனர்!
எதை உண்பது? எப்படி உடுத்துவது? என்பது அவரவர் உரிமை! வெளிநாட்டவர்கள் குட்டைப் பாவாடை (மினி ஸ்கர்ட்) அணியக்கூடாதாம்!
பெண்களின் உடையால்தான் வன்முறைப் புணர்ச்சி - பலாத்கார நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று பொறுப்பற்ற முறையில் பேசிய சங் பரிவார் ஆசாமிகள் ஏராளம் உண்டு!
நிர்வாண சாமியாரை சட்டமன்றத்தில் அமர வைப்பதுதான் இந்துத்துவா கலாச்சாரமா?
இப்படிப் பேசி இவர்களது ‘இந்துத்துவா’ கலாச் சாரத்தைப் பாதுகாக்க புதிய சேனாதிபதிகளாக கிளம்பியிருக்கிறார்கள்!
இவர்களது கலாச்சாரம்தான் என்ன? வெளி நாட்டவர்கள் கேட்காவிட்டாலும், எள்ளி நகையாட மாட்டார்களா?
நிர்வாண சாமியாரை அழைத்து, அரியானா சட்டமன்றத்திற்குள் பேரவைத் தலைவர் இருக் கைக்கும் மேலாக வெள்ளி சிம்மாசனம் போட்டு அமரச் செய்து, முதலமைச்சரும், பிரதானிகளும் நிர்வாண சாமியாரின் கால்களில் முகத்தைப் புதைத்து மரியாதை செய்து, இதோபதேசம் செய்ய வைக்கும் அருவருக்கத்தக்க செய்கைகள்தான் இந்த இந்துத்துவா மேதைகளின் கலாச்சார அடையாளமா?
நிர்வாண சாதுக்கள் என்ற பெயரில் கும்பமேளா சாமியார்கள் வடக்கே திரிவதும், பக்த ‘சீடிகள்’ அவர் களைக் கண்டு ஆசீர்வாதம் வாங்குவதும் அன்றாட நிகழ்வு அல்லவா?
லிங்க வழிபாடு என்பது என்ன?
இவர்களது ‘ஹிந்து’ கடவுளர்களின் லிங்க வழிபாடு என்னவென்று வெளிநாட்டவர்கள் கேட் டால், என்ன விளக்கம் சொல்வார்கள்?
‘வல்லபை விநாயகர்’ என்று (கோவில்களில் வழிபடும் கடவுள்) பெண்ணின் யோனியில் தனது துதிக்கையை வைத்து ‘கார்க்‘ வேலை செய்யும் காட்சிப்படுத்தப்பட்டதுதானே உங்கள் பக்திக் கலாச் சாரம்! இப்படி இருக்கையில், எங்களைப் பார்த்து நீங்கள் இப்படிக் கேட்கலாமா? என்று அப்பெண்கள் சொல்லமாட்டார்கள் என்று கருதி இப்படிப்பட்ட அபத்த உளறல்களா?
நமது கடவுள்கள்பற்றிய சிற்பங்கள் கோவில் கோபுரங்களில், தேர்களில் உள்ளவையெல்லாம் எப்படிப்பட்ட நிலையில், ‘‘சம்போக’’ காட்சிகளைச் செதுக்கியதாக உள்ளன!
கஜூராகோ, கொனார்க், எல்லோரா போன்ற பல சிற்பங்களை வெளிநாட்டவர் பார்க்கையில் இவர்கள் கடவுள்களே இப்படி உள்ளனரே என்று கேட்டால், நாம் தலை கவிழ வேண்டாமா?
உடை, உணவு என்பதெல்லாம் அவரவர் விருப்பம். இதனை அரசு ஆணை போட்டு எவர் மீதும் திணிப்பது சர்வாதிகார நாட்டில்கூட நடக்காதே!
சக அமைச்சர்களைக்
கட்டுப்படுத்துக!
எனவே, பிரதமர் அவர்கள், அமைச்சரவை சகாக்களை - ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்களாக்காமல், இந்துத்துவா ஒலி குழாய்களாக்காமல், தனது கடமைகளைச் செய்ய அறிவுறுத்தினால் அவருக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது!
‘வளர்ச்சி! வளர்ச்சி!’ என்ற முழக்கத்தின் பொருள் இதுதானா? பெண்ணடிமை பேணுவது சரியா? நாடு ஒருபோதும் இதனை ஏற்காது! ஏற்கவே ஏற்காது!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.9.2016