தமிழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு
இனி எப்போதும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிடுக!
மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல்!
சென்னை, ஏப்.22_ மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்த மாணவர்களின் முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு சார்பில் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு அவர்களை மேலும் குழப்பத்திலும், மனக் கவலையிலும் ஆழ்த்துவது நல்லதல்ல.
இந்தப் பிரச்சினையை பொழுது போக்கும் விளையாட்டாக கருதாமல், தெளிவாகவும், உறுதி யாகவும் தமிழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மட்டுமல்ல; இனி எப்போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நேற்று (21_5_2016) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய உச்சநீதிமன்றம் 9-_5-_2016 உத்தரவிட்டது.
சமமான வாய்ப்புகளை வழங்கிடவும்
சமூகநீதியை நிலைநாட்டவும் நுழைவுத் தேர்வு ரத்து
வசதிகள் குறைவான கிராமப்புற மாணவர் களுக்கும், நவீன வசதிகள் மிகுந்த நகர்ப் புற மாணவர் களுக்கு மிடையே நிலவி வரும் வேறுபாடுகளை நீக்கவும், அனைவர்க்கும் தொழிற் கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிடவும், சமூக நீதியை நிலைநாட்டவும், தி.மு. கழகம் 2006ஆம் ஆண்டு அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-_3_-2007 முதல் நடை முறைக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே ப்ளஸ் 2 தேர்வில் பெறும் மதிப் பெண்கள்அடிப்படையில், தொழிற்கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளை அனுசரித்து மாணவ, மாணவியர் அனுமதி பெற்று வந்தனர்.
நுழைவுத் தேர்வினைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு பிரத்தியேகமான நிலையில் இருக்கிறது என்பதை தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சுட்டிக்காட்டி, தன்னிலை விளக்க மனு எதையும் உச்ச நீதி மன்றத்தில் எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்யாது தவிர்த்திருப்பது ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
பல மாநிலங்களிலும் நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மாநில சுகாதார அமைச்சர் களுடன் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதி மன்றத் தில் புதிய மனு தாக்கல் செய்யப்படும் என்று உறுதியும் அளித்தார்.
மத்திய அரசு மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு மாணவர்களைக் குழப்பக் கூடாது!
இந்த நிலையில் தான், 20-_-5_-2016 அன்று மாலை யில், இந்த ஆண்டுக்கு மட்டும் மருத்துவ நுழைவுத் தேர்வினை ரத்து செய்து மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க விருப்பதாக ஏடுகளில் செய்தி வந்தது. இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது. ஆனால் இந்தத் தகவலையும் செய்தியையும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மறுத்து, நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என்றும்; ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங் கியதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என்றும் கூறியிருக்கிறார். மாணவர்களின் முக்கியமான இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு சார்பில் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு, அவர்களை மேலும் மேலும் குழப்பத்திலும், மனக் கவலையிலும் ஆழ்த்துவது நல்லதல்ல.
மத்திய சுகாதார அமைச்சர் அடுத்து ஏதோ புதிய தகவலை 21-_5_-2016 அன்று தெரிவிக்கப் போவ தாகவும் செய்திகள் வருகின்றன. மத்திய அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முக்கியமான இந்தப் பிரச்சினையைப் பொழுது போக்கும் விளையாட்டாக கருதாமல், தெளிவாகவும், உறுதியாகவும் தமிழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில் மட்டுமல்லாமல் இனி எப் போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனடி யாக வெளியிட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என கலைஞர் தெரிவித்துள்ளார்.