செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன் றைக்குப் பாடியது வெறும் பழைய கவிதையல்ல - இன்றைக்கும் தேவைப்படுகின்ற மாமருந்து என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று (29.4.2017) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
சுயமரியாதை என்பது மானுடத்திற்கு மட்டும்தான் உண்டு!
செய்தியாளர்: பெரியாருடைய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தன்னுடைய பாடல்களின் மூலமாக ஜாதி எதிர்ப்பு, மத எதிர்ப்புகளைப்பற்றி பிரச்சாரம் செய்தார் - இப்பொழுது இருக்கக்கூடிய மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறது?
தமிழர் தலைவர்: பெரியாருடைய சுயமரியாதை தத்துவங்களை, அந்த சூரணங்களையெல்லாம் கவிதைத் தேனில் குழைத்துக் கொடுத்து, இதுதான் திராவிடரின், தமிழரின் இனமான இலக்கியம் என்பதைக் காட்டிய மானுடக் கவிஞர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
அவர் தேசியக் கவிஞரா? அல்லது தமிழ்நாட்டுக் கவிஞரா? என்று யாரும் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமில்லை.
‘‘பாரடா மானிடப் பரப்பை’’ என்று சொன்ன கவிஞர். சுயமரியாதை என்பது மானுடத்திற்கு மட்டும்தான் உண்டு - அந்த அடிப்படையில், இன்றைக்கு அந்தக் கருத்துகளுக்கெல்லாம் விரோதமான ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதினால் - தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கை உணர்வுகளை கவிதைத் தேனில் முறுக்கேற்றித் தந்த புரட்சிக்கவிஞருடைய உணர்வுகளும் மீண்டும் பரப்பப்படவேண்டிய காலகட்டம் இது.
விடைகள்- இன்றைய கேள்விகளுக்கு அவைகளிலிருந்துதான் நாம் பெறவேண்டும். எனவே, விரிவான, விளக்கமான தெளி வுரைகளை ஏற்கெனவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வகையில்,
‘‘விடுதலையும், கெடுதலையும் ஒன்றே ஆகும்!’’
‘‘இருட்டறையில் உள்ளதடா உலகம்
ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!’’
என்று சொல்லியிருக்கிறார்.
இன்னமும் ஜாதியவாதிகள் இருக்கின்றார்கள். மதவாதிகள் இருக்கிறார்கள். இவை அத்தனையும் புரட்சிக்கவிஞர் அன்றைக்குப் பாடியது வெறும் பழைய கவிதையல்ல - இன்றைக்கும் தேவைப்படுகின்ற மாமருந்து. அந்த மருந்தை தற்போது நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மிஸ்டு கால் இருப்பவர்களால்
கால் ஊன்ற முடியாது!
செய்தியாளர்: தீவிரமாக நாங்கள் தமிழ்நாட்டில் காலூன்றுவோம் என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்களே...?
தமிழர் தலைவர்: கால் இருக்கின்றவர்கள்தான் ஊன்ற முடியும்; மிஸ்டு கால் இருப்பவர்களால் கால் ஊன்ற முடியாது.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே
கூறினார்.