தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன் என்ன?
‘நீட்' தேர்வை ஒழிக்க முயலுங்கள் - முதலில்
அ.தி.மு.க. அரசு செய்யவேண்டியது இதுதான்
‘நீட்'டை ஒழிக்காமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண் ணிக்கை பெருகுவதால் எந்தப் பயனும் இல்லை; அ.தி.மு.க. அரசு முதலில் செய்யவேண்டியது ‘நீட்' ஒழிப்பே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (1.3.2020) இராமநாதபுரத்திலும், விருதுநகரிலும் இரண்டு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மத்திய அரசின் அனுமதி பெற்று முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்; இதுவரை 11 அரசு மருத் துவக் கல்லூரிகளை தமிழகம் பெற்றுள்ளது என்று முதலமைச்சர் கூறி பெருமிதப் பட்டுள்ளார்.
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அரசு மருத்துவக் கல்லூரிகள் பெருகுவது தமிழ்நாட்டிற்குப் பெருமைதான், வர வேற்கத்தக்கதுதான். ஆனால், இதனால் யார் பலனடையப் போகிறார்கள்?
கலைஞர் காலத்தில் ஒழிக்கப்பட்ட
நுழைவுத் தேர்வு
கலைஞர் முதல்வராக இருந்தபோது, பல மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கிய வரலாற்றுச் சாதனையைத் தாண்டுகிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம்; கலைஞர் காலத் தில் தனிச்சட்டமே நுழைவுத் தேர்வை ஒழித்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இருந்ததே!
‘நீட்' தேர்வு - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒரு ஏற்பாடு - அதுவும் நேஷனல் மெடிக்கல் கவுன்சில் என்ற அமைப்பே இந்தியா முழுவதற்கும் - மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான ‘நீட்' தேர்வை ஏற்பாடு செய்து நடத்தும் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி எதி ரானது.
மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க
மத்திய அரசு மறுக்கலாமா?
தேர்வுகளை நடத்தும் மருத்துவப் பல் கலைக் கழகங்களின் (அரசமைப்புச் சட்டப்படிக்கான) உரிமை; இதில் நுழைந்து ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதும், உச்சநீதிமன்றமே அதற்கு முதலில் எதிராக இருந்து, பிறகு மறுசீராய்வு என்பதன்மூலம் இந்த சட்டப் பிரிவு ஆக்கிரமிப்புக்குத் துணை போனது மிகவும் வேதனைக்குரியது; அது ஒருபுறம் இருக்க, இந்த ‘நீட்' தேர்வுக்கு விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பது, நீதியை, மாநில அரசின் உரிமைகளை மறுத்த ஒரு தான டித்த மூப்பாகும்!
‘நீட்' தேர்வு கடந்த 3, 4 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளதே - அவற்றில் எந்த ஆண்டிலாவது ஊழலோ, தவறுகளோ, குளறுபடிகளோ இல்லை என்று மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கூறிட முடியுமா?
எத்தனை எத்தனை ஊழல்கள் - ஆள்மாறாட்டங்கள்?
100 பேர்களுக்குமேல் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பிடிபட்ட சந்தி சிரிக்கும் அவலம்தான் ‘நீட்' தேர்வு என்ற தகுதி திறமைக்குப் பிறந்த மேதைகள் நடத்தும் இந்தத் தேர்வில்!
ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கோட்டா 15 சதவிகித இட ஒதுக்கீடு மொத்த இடங்களில் மாநிலம் தரவேண்டும் என்ற ஏற்பாட்டினால், தமிழ்நாடு இழக்கும் இடங்கள். (பிற மாநிலத்தவர் அனுபவிக் கவே அவ்விடங்கள்).
அதில் இட ஒதுக்கீடே - பிற்படுத்தப் பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டு, வாய்ப்புகள் பறி போயிருக்கின்ற நிலை நாளையும் தொடரும்.
புள்ளி விவரங்கள்
2016 - ‘நீட்' இல்லாதபோது தமிழக அரசு மேனிலைப்பள்ளிகளில் படித்த மாண வர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 30.
‘நீட்' வந்த பிறகு பெற்றவை வெறும் 5 இடங்களே!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 2 மட்டுமே!
தனியார் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 3 மட்டுமே!
2016 ஆம் ஆண்டில் ‘நீட்' இல்லாதபோது மாநிலக் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் 3,546.
‘நீட்'டுக்குப் பின் கிடத்த இடங்கள் 2,314
இழப்பு 1,232 இடங்கள்.
‘நீட்' இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62.
‘நீட்' தேர்வுக்குப் பின் கிடைத்த இடங்கள் 1,220
கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம்.
‘நீட்'டினால் யாருக்குப் பலன், யாருக்கு இழப்பு என்பதை இந்தப் புள்ளி விவரம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கிராமத்துப் பிள்ளைகளும், ஏழை, எளியவர்களும், கார்ப்பரேட்டுகள் நடத்தும் பயிற்சியில் 10, 15 லட்சம் ரூபாய் கொடுத்து, ஓராண்டு, இரண்டாண்டு இதற்காகவே செலவழித்து ‘நீட்' தேர்விலும் (அதற்கடுத்து ஆயத்தம் ‘நெக்ஸ்ட்' தேர்வாம்) வெற்றி பெறும் நம் மாநிலத்துப் பிள்ளைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைகிறதா, இல்லையா?
நமது வரிப் பணத்தில் பெரும்பகுதி மருத்துவக் கல்லூரி கட்டடங்களாகவும், கட்டுமானங்களாகவும், ஆய்வுக் கூடங் களாகவும் ஆவதற்கு செலவழித்து கட்டி முடித்ததும், பிற மாநிலத்தவர்தானே அனுபவிக்கும் யதார்த்தம் தற்போதுள்ள நிலை?
‘நீட்' தேர்வுக்கான விதிவிலக்கை வற்புறுத்திப் பெற உண்மையிலேயே தமிழக அ.தி.மு.க. அரசு வற்புறுத்தி, மத்திய அரசுடன் போராடியிருந்தால் வாங்கியிருக்க முடியுமே!
‘அம்மா ஆட்சி' என்று பெருமையோடு கூறுகிறார்களே அந்த அம்மா - ஜெயலலிதா ‘நீட்' தேர்வுக்கு எப்படி விலக்கு வாங்கி னார்கள்.
மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்து என்ன பயன்?
இவர்களால் ஏன் முடியவில்லை?
அவைகளைச் செய்யாமல் நாங்கள் எவ்வளவு சமைத்துள்ளோம் பாருங்கள் என்று கூறினால், பசியேப்பக்கார நம் மாநில கிராமத்து மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத் தவர்கள், ஏழை, எளிய, கீழ்மட்ட நடுத்தர வர்க்கத்தினரால் பயன்பெறத் தடையாக ‘நீட்' தேர்வு இருக்கும்வரை, மருத்துவக் கல்லூரிகள் நம் வட்டங்கள் தோறும் வந்தாலும், என்ன பயன்?
கரையான் புற்றெடுக்க, கருநாகம் புகுந்த கதையாகத்தானே இந்த ‘‘சாதனைகளின் விளைவு'' இருக்கும். அதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?
நாம் வீடு கட்டிய பிறகு, வெளியாரைக் குடியேற்ற விடும் வெட்கக்கேடான - வேதனை இது!
எனவே, நீட் தேர்வை ஒழிக்க தமிழ் நாடே அந்த நிலைக்குப் பெரும் ஆதரவாக உள்ளது. எதிர்க்கட்சியாகிய தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எல்லாம்கூட ஆளுங்கட்சியின் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனரே!
மத்திய அரசுக்குப்
பல வகைகளிலும் உதவும் அ.தி.மு.க. அரசால் ‘நீட்'டை
ஏன் ஒழிக்க முடியவில்லை?
மத்திய அரசுக்கு சட்ட நெருக்கடி யிலிருந்து காப்பாற்ற முந்திக் கொண்டு ஓட்டளிக்கும் அ.தி.மு.க. அரசு ஏன் ‘‘அந்த அம்மா''வைப் போல வற்புறுத்தவில்லை? வற்புறுத்த எங்களால் முடியாது - ஏழு பேர் விடுதலைபற்றிய தீர்மானத்திற்கு ஏற்பட்ட கதிதான் என்றால், ‘‘அறுக்கத் தெரியாத விவசாயி இடுப்பில், ஆயிரத்து எட்டு அரிவாள்கள்'' இருந்தும் என்ன பயன்?
தமிழ்நாட்டின் நிலைமையும்
இதுதான்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.3.2020