கார்ப்பரேட்டுகளுக்காக மக்களின் உயிர்களைப் பறித்த மோடி
"பிசினஸ் ஸ்டாண்டர்டு" ஏடு அம்பலப்படுத்துகிறது
புதுடில்லி, மே 27 ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதை பிசினஸ் ஸ்டாண்டர்டு ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.
விதிமுறைகளின் காரணமாக மன்மோகன் சிங் அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டத்தை அடுத்து வந்த மோடி தலைமையிலான அரசு விதிமுறைகளை மாற்றி ஆலை விரிவாக் கத்திற்கு அனுமதி அளித்தது.
தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி அளவுகளை இரண்டு மடங்கு அதிகரிக்க விரிவாக்கப் பணிகளை இந்நிறுவனம் துவங்கியதை அடுத்து, தூத் துக்குடி மக்கள் இதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
100ஆவது நாள் போராட்டத்தின் போது காவல் துறையினரின் முறையற்ற நடவடிக் கைகளின் காரணமாக இதுவரை சுமார் 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் மே 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதித்தது. இதுமட்டும் அல்லாமல் நீதிமன்றம் விரிவாக்க பணி களைத் துவங்கும் முன் மக்களின் விருப் பத்தைக் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் மக்களிடம் விருப்பம் கேட்கத் தேவையில்லை எனக் கூறியுள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது.
மக்களின் விருப்பத்தைக் கேட்க அவசியமில்லை
சென்னை உயர் நீதிமன்றம் மக்களின் விருப்பத்தின் பெயரிலேயே விரிவாக்கப் பணிகள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், வேதாந்தா நிர்வாகம், நாங்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைப்பிடம் இருந்து தொழிற்சாலையின் உற்பத்தியை இரட்டிப்பாக்க ஒப்புதல் பெற்றுவிட்டோம். இந்நிலையில், மக்களிடம் அவர்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2014இல்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் பார்க்கும் போது மோடி தலைமையிலான அரசு தான் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் பசுமை ஒழுங்குமுறை விதிகளில் சில முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இதனைப் பயன்படுத்தியே வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை போல் பல ஆலைகளின் முதலாளிகள் மக்களின் விருப்பத்தைக் கேட்காமல் நிறுவன விரிவாக்கத்தில் இறங்கியுள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவே ஆட்சியில் இருக்கும் மோடியால் மக்களின் எதிர்ப்பால் ஒரு கார்ப்பரேட் அதிபர் வேதனைப்படுகிறார் என்றால் பொறுத்துக் கொள்ள முடியுமா..? இது போன்ற பல நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டம் நின்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் மோடி தலைமையிலான அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்து மக்களை ஏமாற்றியுள்ளது.
எந்த ஒரு ஆலையின் விரிவாக்கத் திட்டத்திற்கும் மக்களின் அனுமதி பெறத்தே வையில்லை என்ற மாற்றங்கள் சட்டமாக வந்த சில மாதங்களிலேயே வேதாந்தா நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ளது. இதன் வாயிலாகவே மக்களிடம் விருப்பம் கேட்காமல் -- அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை உணர்ந்தும் வேதாந்தா, மோடி அரசு இணைந்து இந்த விரிவாக்கப் பணிகளில் இறங்கியுள்ளன.
2014-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் மன்மோகன் சிங் அரசிடம் வேதாந்தா நிறுவனம் தங்கள் ஆலையை விரிவுபடுத்த அனுமதி கேட்டுள்ளது. ஆனால் மன்மோகன் சிங் அதை நிராகரித்து விட்டார். இந்த நிலையில் மீண்டும் மார்ச் மாதம் மத்திய அரசை வேதாந்தா நிறுவனம் அணுகியது, ஆனால் அப்போது தேர்தல் நடைமுறை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்ட கால கட்டத்திலும் தூத்துக்குடி வேதாந்தா போன்ற தொழிற்சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக பகுதிகளைச் சுற்றியுள்ள மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அனுமதி அளிக்கப்படும் எனத் திட்டவட்டமாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து வந்த மோடி தலைமையிலான அரசு ஆலை விரிவாக்கத்திற்கு தடையாக இருக்கும் விதிகளை மாற்றி நிறுவனங்களுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. டிசம்பர் 2014இல் மோடி அரசு கொண்டு வந்த மாற்றங்கள் வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்குச் சாதகமாக அமைந்த நிலையில் 2016இல் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைப்பு டிசம்பர் 2014இல் அறிவித்த விதிகள் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தது.
இது வேதாந்தா நிறுவனத்தை மட்டும் அல்லாமல் பல நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளும், புதிய நிறுவனத்தைத் துவங்கும் முயற்சிகளும் தடைப்பட்டன. டிசம்பர் 2014இல் அறிவிப்பட்ட மாற்றங்கள் அனைத்தையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இதன் மூலம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் மூலம் சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. இதன் படி தொழிற்துறை பூங்காவில் இருக்கும் திட்டங்களுக்கு, மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் தான் சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தது. ஆனால் இது போன்ற சிக்கல்கல் வரும் என்ற நிலையில் மோடி தலைமையிலான அரசு விரைந்து வேதாந்தா நிறுவனத்திற்கான அனைத்து விரிவாக்கப் பணிகளுக்கும் ஒப்புதல் கொடுத்து விட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கெடுபிடியால் சுற்றுச்சூழல் அமைச்சகம் கொண்டு வந்த புதிய விதிகள் வெளிச்சத்திற்கு வந்து இந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது. சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கின் விசாரணையில் மே 23ஆம் தேதி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்குத் தடை விதித்தது மட்டுமல்லாமல் விரிவாக்கப் பணிகளைத் துவங்கும் முன் மக்களின் விருப்பத்தைக் கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கான முதல் தவணைக்கான அனுமதி முடிந்துவிட்ட நிலையில் 2013இல் மீண்டும் அனுமதிக்காகச் சென்ற போது மே 2014இல் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசு அரசு மக்களின் விருப்பத்தின் பெயரில் தான் அனுமதி வழங்கப்படும் எனத் திட்டவட்டமாகக் கூறியது.
டிசம்பர் 2014இல் மோடி தலைமையிலான அரசு சுற்றுச்சூழல் விதிகளை மாற்றி மார்ச் 2015இல் வேதாந்தா நிறுவனத்திற்கு டிசம்பர் 2018 வரை சுற்றுச்சூழல் அனுமதியை மார்ச் 2015இல் வழங்கியது. இக்கால கட்டத்தில் மக்களின் அனுமதி கேட்க வேண்டும் என்ற பிரச்சினை இருந்த நிலையில் ஸ்டெர்லைட் தனது கட்டுமான பணிகளைத் துவங்கியது. கட்டுமான பணிகள் துவங்கிய உடனேயே மக்கள் போராட்டங்களை நடத்தத் துவங்கினர்.
கடந்த 3 மாதங்களாக மக்களின் உயிரைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. இதில் 100வது நாள் போராட்டத்தில் காவல் துறையின் தூப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இதுவரை உயிரை இழந்துள்ளனர்.
பொதுவாக அனைத்துப் பெரிய தொழிற்சாலைகளும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகு தான் துவங்க முடியும். இந்தத் திட்டத்தை உருவாக்குபவர்கள் இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு எவ்வாறு பாதிப்பு இருக்கும் என்று அறிக்கையினைத் தயாரித்துச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை மாநில அரசுகளின் கண்காணிப்பில் பொது மக்களிடம் விளக்க வேண்டும். பின்னர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அந்த அறிக்கையினைப் படித்துத் தொழிற்சாலைக்கான அனுமதியை அளிக்கலாமா வேண்டாமா என்ற முடிவை எடுக்கும். மக்களுடன் கலந்துரையாடும் போது அவர்களால் இந்தத் திட்டத்தினைத் தடுக்க முடியாது. ஆனால் இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்த இருக்கும் நிறுவனமானது மக்களின் கவலைகளை மத்திய அரசுக்குச் சமர்ப்பித்து அதற்கான தீர்வினைக் காணலாம். ஆனால் மத்தியில் அமைந்திருக்கும் மோடி அரசு மக்களின் கருத்தைக் கேட்காமலேயே ஆலை விரிவாக்கத்தை தொடங்க அனுமதி அளித்த இன்று வாழ்வாதார உரிமைக்காக போராடுபவர்களின் உயிரைப் பறித்து விட்டது.
'பிசினஸ் ஸ்டாண்டர்டு' 26.5.2017